தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தாங்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. எனினும், 2024 மக்களவைத் தேர்தல் அடிப்படையில் பாஜகவின் வாக்குவங்கி உயர்ந்திருக்கிறது என்ற காரணத்தைக்காட்டி, அதிமுகவிடம் 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்கத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி பாஜக 27, பாமக 18, அமமுக 11 ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களைப் பெற்ற பாஜக, தற்போது 27 இடங்களைப் பெற்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, தற்போது 18 இடங்களை மட்டுமே கேட்டுப்பெற்றுள்ளது. இதன் மூலம், கடந்த தேர்தலை விட
இத்தேர்தலில் பாமகவின் வாக்குவங்கி சரிந்துள்ளது என்று அன்புமணி ஒப்புக்கொள்கிறாரா எனத் தெரியவில்லை.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 11 இடங்களைப் பெற்றுள்ளது. குக்கர் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.








