2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்த திமுக, பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. அக்கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மகக்ள விடுதலைக்கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் இடம் பெற்றிருந்தன.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி ஆகியன முதன்மையாக இடம்பெற்றிருந்தன.
திமுக கூட்டணியைப் பொருத்தவரை, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக வாக்குவங்கியும் அதைச்சார்ந்த தெளிவான கொள்கைகளும் இருந்ததால் ஒரே அணியாக ஒற்றுமையாகக் கூட்டணி அமைத்தன.
ஆனால், 2021 அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, பாஜகவின் தத்துவமும் திராவிட இயக்கத் தத்துவமும் ஒன்றுபட்டவையல்ல என்று, திமுக கூட்டணி தெளிவாகப் பிரசாரம் செய்தது.
2021க்குப் பிறகு நடந்த எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற முடியவில்லை. பாஜகவை விலக்கி வைத்துப் பார்த்தது. அப்போதும் அதிமுக வெற்றிபெற முடியவில்லை.
இந்நிலையில் கருத்துவேறுபாடுகளை மறந்து 2026ல் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி), தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
2021ல் பிரிந்திருந்த அமமுகவும் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதால், தற்போதைய வாக்குவங்கி வலிமை, திமுக கூட்டணிக்கா, அதிமுக கூட்டணிக்கா என்ற கேள்வி எழுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, தென் மாநிலங்களில் அதிமுகவின் வெற்றியைக் கடுமையாகப் பாதித்தது. ஏறத்தாழ 21 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு அமமுக வாக்குகள் பிரிந்தது காரணமாக அமைந்தது என்று சொல்லப்பட்டது.
இப்போதைய சூழலில் திமுக தன்னுடைய கூட்டணிக் கட்சிகள் எதையும் இழக்கவில்லை. தொகுதி ஒதுக்கீட்டு உடன்பாடுகளை மென்மையாகக் கையாளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்திருப்பதால் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியை அதிமுக கூட்டணி பெறக்கூடும். அதற்கு ஈடாக மக்கள் நீதி மையத்தைத் திமுக சேர்த்திருப்பதால் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியைச் சமன்செய்யலாம் என்று கருதுகிறது. இந்நிலையில் பாமகவும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
பாமகவினர் தற்போது இராமதாஸ் பக்கமா, அல்லது அன்புமணி பக்கமா? என்பதை எளிதில் யாராலும் தீர்மானிக்க முடியவில்லை.
இராமதாஸ் பிரிவு பாமக, திமுக பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகப் பேசப்பட்டாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் பற்றி தெரியவில்லை. இராமதாஸ், திமுக கூட்டணியில் இணைய வேண்டுமானால், திருமாவளவனின் ஆதரவு தேவை.
ஆனால் பாஜகவுடன் இனி எவ்விதமான ஒட்டுதலோ உறவோ இல்லை என்றும், பாஜகதான் பாமகவைச் சிதைத்தது என்றும் ஒருவேளை ராமதாஸ் பேச ஆரம்பித்தால், திருமாவளவன், பாமக இராமதாஸ் பிரிவைத் திமுகவில் இணைய ஒப்புதல் தருவார் என்று கருத வேண்டியுள்ளது.
ஆனால் அப்படியான பாஜக எதிர்ப்பு நிலையில் இதுவரை ராமதாஸ் இருப்பதற்கான வாய்ய்பு இல்லை என்பதால், இராமதாஸ் பிரிவு, திமுகவில் இணைவது சாத்தியமாகாது.
தேமுதிகவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டு அரசியலில் புயலை ஏற்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தவர் விஜயகாந்த். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, ஒட்டுமொத்தமான வாக்குவங்கியையும் இழந்துவிட்டதை நாம் உணரலாம். இதற்கான சாட்சியாக 2016ல் தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானபோது, தேமுதிக முழுமையாகச் சேதாரம் அடைந்திருப்பதை அறிய முடிந்தது. அந்தத் தேர்தலுடன் தேமுதிக தனித்து நிற்கும் ஆற்றலையும் இழந்தது.
ஆனால், விஜயகாந்தின் தொண்டர்களால் இன்னமும் தேமுதிக குறிப்பிடத்தக்க வாக்குவங்கியைத் தக்க வைத்திருப்பதைத் தவிர்க்க முடியாது.
இந்நிலையில் தேமுதிக திமுகவுடன் சேர்ந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடக் கூடிய சூழலே உள்ளது.
எனவே, தற்போதைய சூழலில் திமுக கூட்டணியா? அதிமுக கூட்டணியா? என்று பார்த்தால், திமுக கூட்டணியே வலுவான கூட்டணியாக உள்ளது.








