இதுகுறித்துச் சென்னை தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் கூறியதாவது,
2019 முதல் திமுக கூட்டணியில் நாங்கள் பயணித்தோம்.
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட, கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என்று திமுக தொகுதிப் பேச்சு வார்த்தை குழு தெரிவித்துவிட்டது.
திமுக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அதிகாரிகள் இருக்கின்றனர். திமுக ஆட்சியில் அவர்கள் பாசிசத்தை ஆதரிக்கின்றனர். சமூக நீதிக்கு எதிரான அதிகாரிகளை வைத்துக்கொண்டு, திமுக எப்படிச் சமூக நீதியைக் காப்பாற்றும்?
திமுக அமைச்சர் ஒருவர் பரந்தூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இடம் வாங்கியுள்ளார். அதை 5 மடங்கு கொடுத்து அரசு வாங்குகிறது. இதற்கு இந்த வேல்முருகன் தடையாக உள்ளதாகத் திமுக அரசு கருதுகிறது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்தெந்த அமைச்சர்கள் என்னென்ன தவறுகள் செய்துள்ளனர் என்கிற ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
எங்கள் கட்சியின் 10 அம்சக் கோரிக்கைகளைத் திமுக நிறைவேற்ற முன்வரவில்லை. எனவே திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம். எங்களுக்கு ஒத்த சிந்தனையுள்ள சிறுகட்சிகளுடன் இணைந்து யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். ஆனால் பாஜக இடம் பிடித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டோம்.
வேல்முருகனின் இந்த அறிவிப்பால், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வாக்குசதவிகிதம் குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.








